வாஷிங்டன் : குழந்தைகளின் மூளை, நரம்பு மற்றும் கண் வளர்ச்சிக்கு மீன் உணவு கொடுப்பது மிகவும் அவசியம் என ஆய்வில் தெரியவந்துள்ளது.அமெரிக்காவின் யுனிவர்சிட்டி ஆப் இலினாய்ஸ் உணவு அறிவியல் பேராசிரியர் சூசன் ப்ரூவர் தலைமையிலான குழுவினர் குழந்தைகளுக்கான உணவில் மீன் உணவின் பங்கு குறித்து ஆய்வு மேற்கொண்டனர். அதன் விவரம்:
குழந்தைகள் தாய்ப்பாலிலிருந்து திட உணவுக்கு மாறும்போது, போதுமான ஊட்டச்சத்துக்களை வழங்க சில தாய்மார்கள் தவறி விடுகின்றனர். இதனால் பிற்காலத்தில் பல்வேறு நோயால் பாதிக்கப்படுகின்றனர். குறிப்பாக, மூளை, நரம்பு மற்றும் கண் வளர்ச்சிக்கு ஒமேகா&3 என்ற கொழுப்பு அமிலம் மிகவும் அவசியமாக தேவைப்படுகிறது. இது மீன் உணவில் அதிக அளவில் காணப்படுகின்றன.
குறிப்பாக, வஞ்சிரம் மீனை அடிப்படையாகக் கொண்ட உணவு வகைகளை குழந்தைகளுக்கு கொடுப்பதால் பல்வேறு பலன்கள் கிடைக்கின்றன. எலும்பு வளர்ச்சிக்குத் தேவையான கால்சியம், வைட்டமின் டி உள்ளிட்ட ஊட்டச்சத்துக்கள் இதில் அடங்கி உள்ளன. மேலும் இதில் உள்ள ஒமேகா கொழுப்பு அமிலம், இதய நோய் வருவதைத் தடுக்கிறது.
அமெரிக்கன் ஹார்ட் அசோசியேஷன் மற்றும் அமெரிக்கன் அகாடெமி ஆப் பீடியாட்ரிக்ஸ் ஆகியவையும் குழந்தைகளுக்கு மீன் உணவு அவசியம் என்பதை உறுதிப்படுத்தி உள்ளன. அடுத்தபடியாக, குழந்தைகளின் உணவு பழக்கம் என்பது 5 வயதுக்குள் நிர்ணயிக்கப்படுகிறது. இந்த பருவத்தில் சாப்பிடும் உணவுகளையே வாழ்நாள் முழுவதும் விரும்பி சாப்பிடுவார்கள். எனவே, அதிக பயன் அளிக்கும் கடல் உணவுகளை குழந்தைப் பருவத்திலேயே சாப்பிட பழக்கப்படுத்த வேண்டும் என ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment