Islamic Widget

January 06, 2012

கடலூரில் சமையல் கேஸ் கடும் தட்டுப்பாடு

கடலூர், ஜன. 5: புயலால் சீர்குலைந்து போன கடலூர் மாவட்டத்தில்  சமையல் கேஸ் தட்டுப்பாடு, மக்களை மேலும் அவதிக்குள்ளாக்கியுள்ளது.
புயல் தாக்குதலுக்கு உள்ளான கடலூர் மாவட்டத்தில் ஒரு வாரத்துக்கு பிறகு வியாழக்கிழமை நகரப்புறங்களில் மின் விநியோகம் தொடங்கியுள்ளது. கிராமங்களில் சீரடைய மேலும் நாளாகும் என்கிறார்கள்.
இப்போது வீடுகளில் சமையல் கேஸ் பயன்பாடு அதிகரித்து உள்ளது. இந்த நிலையில் கடலூரில் உள்ள கேஸ் ஏஜென்ஸிகளோ புக்கிங் செய்து 40 நாள்களுக்குப் பிறகுதான் புதிய சிலிண்டர்களை விநியோகிக்க முடியும் என்று கைவிரிக்கிறார்கள்.
கடலூரில் பழுதான பல கேஸ் நிறுவனங்களின் தொலைபேசிகள் இன்னும் சரியாகவில்லை. நேரில் சென்றால், ஏன் என்று கேட்கவே ஆளில்லாத நிலை காணப்படுகிறது.
பல கேஸ் ஏஜென்சிகள் வீடுகளுக்கு சிலிண்டர்களை விநியோகிக்க மறுத்து வருகின்றன. காரணம் கேட்டால், வண்டியில் எடுத்துக்கொண்டு வரும் நிலையில் சாலைகள் இல்லை என்கிறார்கள். இதனால் கடலூர் நகரில் எங்கு பார்த்தாலும் இருசக்கர வாகனங்களில் சிலிண்டர்களை, வாடிக்கையாளர்கள் தட்டுத்தடுமாறி எடுத்துச் செல்வதை காண முடிகிறது.
இதுகுறித்து கடலூர் மகந்தா கேஸ் ஏஜென்ஸியில் கேட்டதற்கு, சிலிண்டர் விநியோகிக்கப்பட்டு 21 நாள்களுக்குப் பிறகுதான் புக்கிங் செய்ய முடியும். புக்கிங் செய்து 20 நாள் கழித்துதான் சிலிண்டர் வழங்க முடியும்.
அனைத்து கேஸ் ஏஜென்ஸிகளும் இந்த நடைமுறையைத் தான் கடைபிடிக்கின்றனர். 40 நாள்களுக்கு முன்னதாக விநியோகிக்க முடியாது என்று தெரிவித்தனர்.  
இதுகுறித்து தமிழ்நாடு நுகர்வோர் கூட்டமைப்பின் பொதுச் செயலாளர் எம்.நிஜாமுதீன் கூறுகையில், கடலூர் மாவட்டத்தில் கேஸ் ஏஜென்ஸிகள் மக்களை ஏமாற்றி வருகின்றன. கேஸ் நிறுவன அதிகாரிகளும், ஏஜென்ஸிகளும் கைகோர்த்துக் கொண்டு நுகர்வோர் நலன்களை புறக்கணித்து வருகிறார்கள்.
புயல் தாக்குதல் காரணமாக கடலூருக்கு கூடுதல் கேஸ் வருவதாகத் தெரிவித்தனர். ஆனால் ஏஜென்ஸிகளோ வரவில்லை என்கின்றன. ரேஷன் மண்ணெண்ணை விநியோகமும் சரியில்லை.
புயல் பாதிப்புக்கு உள்ளான மக்களுக்கு அரசு அறிவித்துள்ள மண்ணெண்ணை நகரங்களில் கிடைக்கவில்லை. 1,000 குடும்பங்களைக் கொண்ட சங்கொலிக்குப்பம் கிராமத்தில், 300 பேருக்கு மட்டுமே மண்ணெண்ணை வழங்க அரசு உத்தரவிட்டு இருக்கிறது.
தட்டுப்பாடின்றி மண்ணெண்ணை, கேஸ் வழங்க வேண்டும்.
புயலால் கடும் துயரத்தை மக்கள் சந்தித்துள்ள பரிதாப நிலையிலாவது, புதிய சிலிண்டர் விநியோகத்தை துரிதப்படுத்த வேண்டும் என்றார்.

No comments:

Post a Comment