Islamic Widget

September 26, 2010

அயோத்தி தீர்ப்பை ஒத்தி வைக்கக் கோரிய மனு : மூன்று நீதிபதிகள் பெஞ்ச் 28ம் தேதி விசாரணை

புதுடில்லி : அயோத்தியில் சர்ச்சைக்குரிய நிலம் தொடர்பான வழக்கின் தீர்ப்பை ஒத்தி வைக்கக் கோரி, தாக்கல் செய்யப்பட்ட மனு, சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி கபாடியா தலைமையிலான பெஞ்ச் முன், வரும் 28ம் தேதி விசாரணைக்கு வருகிறது.

அயோத்தியில் சர்ச்சைக்குரிய நிலம் யாருக்கு சொந்தம் என்பது தொடர்பான வழக்கு, கடந்த 60 ஆண்டுகளாக நடந்து வருகிறது. இந்த வழக்கின் தீர்ப்பை, அலகாபாத் ஐகோர்ட்டின் லக்னோ பெஞ்ச், கடந்த 24ம் தேதி அறிவிப்பதாக இருந்தது. ரமேஷ்சந்த் திரிபாதி என்பவர், "சர்ச்சைக்குரிய நிலம் தொடர்பான வழக்கின் தீர்ப்பை ஒத்தி வைக்க வேண்டும்' எனக் கோரி, சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்தார். இதை உடனடியாக விசாரிக்க மறுத்த சுப்ரீம் கோர்ட் பெஞ்ச், அதை மற்றொரு பெஞ்ச் முன் பட்டியலிடும்படி, சுப்ரீம் கோர்ட் பதிவாளருக்கு உத்தரவிட்டது.

இதையடுத்து, திரிபாதி தாக்கல் செய்த மனு, நீதிபதிகள் ரவீந்திரன் மற்றும் கோகலே ஆகியோர் அடங்கிய பெஞ்ச் முன் விசாரணைக்கு வந்தது. அப்போது, ஐகோர்ட் உத்தரவை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்டுள்ள இந்த மனுவை விசாரணைக்கு ஏற்றுக்கொள்வது குறித்து நீதிபதிகள் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இதையடுத்து, அயோத்தியில் சர்ச்சைக்குரிய நிலம் தொடர்பான வழக்கின் தீர்ப்பை அலகாபாத் ஐகோர்ட் வெளியிட, ஒரு வார காலம் இடைக்கால தடை விதிக்கப்பட்டது.

மேலும், தீர்ப்பை ஒத்தி வைக்கக் கோரி, திரிபாதி தாக்கல் செய்த மனு மீதான விசாரணையும் ஒத்தி வைக்கப்பட்டது. இந்நிலையில், இந்த மனு வரும் 29ம் தேதி, சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி எஸ்.எச்.கபாடியா தலைமையிலான பெஞ்ச் முன் விசாரணைக்கு வருகிறது. தலைமை நீதிபதியைத் தவிர, நீதிபதிகள் அப்தாப் ஆலம், கே.எஸ்.ராதாகிருஷ்ணன் ஆகியோரும், மனுவை விசாரிக்கும் பெஞ்சில் இடம் பெற்றுள்ளனர். வரும் 28ம் தேதி முதல் வழக்காக, இந்த மனு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படுகிறது. இதன்படி, அன்று காலை 10.30 மணிக்கு மனு மீதான விசாரணை நடக்கவுள்ளது.

No comments:

Post a Comment