Islamic Widget

September 23, 2010

பரங்கிப்பேட்டையைச் சேர்ந்த பள்ளி மாணவனை கடலூரில் கடத்த முயன்றதாக வார்டன் உள்பட 7 பேர் மீது வழக்கு

பரங்கிப்பேட்டையைச் சேர்ந்த பள்ளி மாணவனை கடலூரில் கடத்திச் செல்ல முயன்றதாக பள்ளியின் முன்னாள் வார்டன் உள்பட 7 பேர் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.




கடலூர் மாவட்டம் பரங்கிப்பேட்டையைச் சேர்ந்த தங்கவேல் மகன் மகராஜன்(வயது 12). இவன் கடலூர் சேகர் நகரில் உள்ள தனது உறவினர் ஏழுமலை வீட்டில் தங்கி கடலூரில் உள்ள ஒரு தனியார் பள்ளிக்கூடத்தில் 7-ம் வகுப்பு படித்து வருகிறான்.



நேற்று முன்தினம் மாலையில் பள்ளிக்கூடம் முடிந்து வெளியே வந்த மகராஜனை ஒரு கும்பல் காரில் கடத்திச்சென்றது. அப்போது வழியில் தண்டபாணி நகர் அருகே அவனை காரில் இருந்து கீழே தள்ளிவிட்டு விட்டு கும்பல் தப்பிச்சென்றது.



சாலையோரத்தில் விழுந்து கிடந்த மாணவனை, அந்த வழியாக வந்தவர்கள் மீட்டு, அவனது கட்டுகளை அவிழ்த்து விசாரித்தனர். அப்போது அவன், `நான் பள்ளி முடிந்து வீட்டுக்கு சென்று கொண்டிருந்த போது சிலர் என்னை பிடித்து கண்களை கட்டி காரில் தூக்கிப்போட்டு கடத்திச்சென்றனர். அப்போது, எனது பெயரை கேட்டனர், எனது பெயர் பசுபதி என்று கூறினேன். பின்னர், விடுதி வார்டன் பிருதிவிராஜை தெரியுமா? என்று கேட்டனர், நான் தெரியாது என்று சொன்னதால் என்னை காரில் இருந்து இறக்கி விட்டனர். அந்த காரில் 6 பேர் இருந்ததை பார்த்தேன். ஒருவர் தாடி வைத்து இருந்தார். இன்னொருவர் மொட்டை அடித்து இருந்தார். மற்றவர்கள் முகத்தை துணியால் கட்டியிருந்தனர்` என்று சொன்னான்.



இந்த சம்பவம் கடலூரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இது பற்றி மாணவரின் உறவினர் ஏழுமலை கடலூர் புது நகர் போலீசில் புகார் செய்தார். அந்த புகாரில், `கடந்த ஒரு மாதத்துக்கு முன்பு மாணவர் மகராஜன் குமார புரத்தில் உள்ள விடுதியில் தங்கி பள்ளியில் படித்து வந்தான், அந்த விடுதியின் வார்டனாகவும், உடற்கல்வி ஆசிரியராகவும் இருந்த பிருதிவிராஜ் ஒரு நாள் மகராஜனை ஓரினசேர்க்கைக்கு கட்டாயப்படுத்தினார். இதனால் வார்டன் பணி நீக்கம் செய்யப்பட்டார். இந்த சம்பவம் காரணமாக மாணவனை கடத்திச்செல்ல முயன்றுள்ளனர்` என்று கூறி உள்ளார்.



அதன் பேரில் பிருதிவிராஜ் உள்பட 7 பேர் மீது புதுநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து, பிருதிவிராஜையும், கூலிப்படையினரையும் தேடி வருகிறார்கள். பிருதிவிராஜ் அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் தாலுகா வெண்ணங்குழி கிராமத்தைச்சேர்ந்தவர் ஆவார். இதனால் அவரை தேடி அரியலூர் மாவட்டத்துக்கு கடலூர் போலீசார் விரைந்துள்ளனர்.



Source: Daily Thanthi

No comments:

Post a Comment