பரங்கிப்பேட்டை: கடலூர் மாவட்டத்தில் ஒரு குறிப்பிட்ட பகுதிகளில் காதை பிளக்கும் சப்தம் ஒன்று கேட்டது என்றும், நில அதிர்வு காரணமாக வந்ததா அல்லது, விமானம் எதுவும் நொறுங்கி விழுந்ததா என பரபரப்பு நிலவி வருகிறது.
மதியம் ஒரு மணியளவில் கடலூர் மாவட்டத்தின் பலத்த எதிரொலியுடன் சப்தம் கேட்டது. அந்நேரத்தில் சென்ற விமானம் விழுந்து விட்டதா என பலரும் கேட்ட படி இருந்தனர். ஆனால் நில அதிர்வுதான் என பலர் கூறினர். என்ன நடந்தது என்பதை கண்டறிய முடியவில்லை, கடலூர், புவனகிரி, குறிஞ்சிப்பாடி, பண்ருட்டி, காடாம்புலியூர் உள்ளிட்ட பகுதிகளில் இந்த சம்பவத்தினால் பரபரப்பு நிலவியது. பலரும என்ன நடந்தது என்பது குறித்து போன் மூலம் விசாரித்தபடி உள்ளனர். குறிஞ்சிப்பாடி மற்றும் குள்ளஞ்சாவடியில் பள்ளிக்கு விடுமுறை அளிக்கப்பட்டது.
மாவட்ட கலெக்டர் என்ன சொல்கிறார் ? : இந்த சம்பவம் குறித்து மாவட்ட கலெக்டர் ராஜேந்திர ரத்னு கூறுகையில்: பரங்கிப்பேட்டைக்கு இந்திய போர் விமானம் பயிற்சிக்கு வந்துள்ளது. இது தாழ்வாக பறந்த காரணத்தினால் இந்த சப்தம் ஏற்பட்டிருக்கலாம். மற்றபடி எதுவும் நடக்கவில்லை என்றார்.
பன்ருட்டி தாசில்தார் பேட்டி : பன்ருட்டி தாசில்தார் அனந்தராம் கூறியதாவது: இங்கு சொல்லும்படியாக நில அதிர்வு எதுவும் நடக்கவில்லை. டில்லி வரை நாங்களும் விசாரித்து விட்டோம். ஆனால் இந்தியாவில் எங்குமே நில நடுக்கம் பதிவாகவில்லை. ஜப்பானில் இன்று 5. 5 ரிக்டர் அளவு நில நடுக்கம் பதிவாகியிருக்கிறது. சப்தம் எங்கிருந்து வந்தது என்று விசாரித்து வருகிறோம் என்றார்.
கேட்டவர்கள் பேட்டி: காடம் புலியூரை சேர்ந்த ஒரு விவசாயி கூறுகையில் ; சப்தம் கேட்டது. எது என்ன சப்தம் என்று தெரியவில்லை . கட்டடங்கள், ஜன்னல்கள் அதிர்ந்தது. என்ன நடந்துன்னே தெரியவில்லை என்றார் .
சிதம்பரம் அருகே சென்ற போது விமானம் எதுவும் நொறுங்கியதா என்றும் பரபரப்பாக செய்திகள் பரவியது. ஆனால் எந்த தகவலும் உறுதி செய்யப்படவில்லை. சமீபத்தில் தானே புயல் காரணமாக கடும் பாதிப்புக்குள்ளான இந்த மாவட்டத்தில் இன்றைய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
No comments:
Post a Comment