Islamic Widget

December 03, 2010

கடலூர் மாவட்டத்தில் தொடர் கன மழை : ரயில் பாதைகளில் கோட்ட மேலாளர் ஆய்வு

பரங்கிப்பேட்டை : கடலூர் மாவட்டத்தில் பெய்து வரும் கன மழையால் ரயில் பாதையில் ஏதேனும் பாதிப்பு ஏற்பட்டுள்ளதா என கோட்ட மேலாளர் நேற்று ஆய்வு மேற்கொண்டார். விழுப்புரம் - மயிலாடுதுறை மீட்டர் கேஜ் ரயில் பாதையை அகல பாதையாக மாற்றி, கடந்த மார்ச் முதல் ரயில்கள் இயக்கப்பட்டு வருகிறது. புதிதாக அமைக்கப்பட்ட இந்த பாதையில் கூடுதல் ரயில்கள் இயக்கப்பட உள்ளதால் ஏதேனும் குறைகள் உள்ளதா என்பதை கண்டறிய அதிகாரிகள் குழுவினர் அவ்வப்போது ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.


இந்நிலையில் கடலூர் மாவட்டத்தில் கடந்த வாரம் முதல் பெய்து வரும் கன மழையால் கடலூர் முதுநகர் ரயில்வே ஜங்ஷன் உள்ளிட்ட பல பகுதிகளில் தண்டவாளங்களில் தண்ணீர் சூழ்ந்தது. பரங்கிப்பேட்டை அகரம் ரயில்வே பழைய கர்டர் பாலம் சாய்ந்தது. கடலூர் முதுநகர் ரயில்வே குடியிருப்பு பகுதிகளில் மழை நீர் சூழ்ந்தது. இந்த பகுதிகளை பார்வையிடவும், தொடர் மழையால், வெள்ளாறு மற்றும் கொள்ளிடம் ஆறுகளில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கினால் ரயில்வே பாலங்களில் பாதிப்பு ஏற்பட்டுள்ளதா என ஆய்வு செய்யவும் திருச்சி கோட்ட ரயில்வே மேலாளர் வைத்தியலிங்கம், உதவி கோட்ட மேலாளர் செல்வராஜ் தலைமையிலான தொழில் நுட்பக் குழுவினர் நேற்று சிறப்பு ரயில் மூலம் திருச்சியிலிருந்து விருத்தாசலம் வழியாக கடலூர் முதுநகர் வந்தனர்.

அங்கு அதிகாரிகள் குழுவினர் ரயில்வே ஸ்டேஷன், ரயில் பாதை மற்றும் ஊழியர்களின் குடியிருப்பு பகுதிகளை பார்வையிட்டனர். பின்னர் மயிலாடுதுறைக்கு புறப்பட்டனர். செல்லும் வழிகளில் ஆங்காங்கே ரயில்பாதைகளை ஆய்வு செய்தனர். பரங்கிப்பேட்டை ரயில்வே பாலத்தை ஆய்வு செய்தனர். மழையால் கடந்த வாரம் சாய்ந்த பழைய கர்டரின் தன்மைகள் குறித்து கேட்டறிந்தனர். அங்கிருந்து சிதம்பரம், கொள்ளிடம், மயிலாடுதுறை வழியாக திருச்சி வரை சென்றனர்.

Source:dinamalar photos: pno.news

No comments:

Post a Comment