Islamic Widget

September 27, 2010

அயோத்தி தீர்ப்பு யாருக்கு எதிராக இருந்தாலும் ஒற்றுமையை பேணி காக்க வேண்டும் - தொல்.திருமாவளவன்

சென்னை: அயோத்தி தீர்ப்பு யாருக்கு எதிராக இருந்தாலும் இந்துக்களும், இஸ்லாமியர்களும் சகோதர உணர்வுடன் ஒற்றுமையை பேணிக்காக்க வேண்டும் என்று தொல்.திருமாவளவன் கூறியுள்ளார். இதுகுறித்து விடுதலை சிறுத்தைகள் தலைவர் தொல்.திருமாவளவன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-


அயோத்தி நிலம் யாருக்கு சொந்தம் என்கிற வழக்கு அலகாபாத் உயர்நீதிமன்றத்தில் நீண்டகாலமாக விசாரணையில் இருந்தது. இந்த வழக்கில் யாருக்கு எதிராக இத்தீர்ப்பு வழங்கப்பட்டாலும், நாடு தழுவிய அளவில் பெரும் வன்முறை வெடிக்கும் என்கிற அச்சம் அனைத்துத்தரப்பு மக்களிடையேயும் வெகுவாக மேலோங்கி உள்ளது.



இந்நிலையில் காமன்வெல்த் நாடுகள் பங்கேற்கும் விளையாட்டுப் போட்டிகள் டெல்லியில் எதிர்வரும் அக்டோபர் 3-ந் தேதியில் இருந்து அக்டோபர் இறுதிவரை நடைபெறவுள்ளன. இதனால் சர்வதேச அளவிலும் அயோத்தி தீர்ப்பு தொடர்பான அச்சம் பரவியுள்ளது.
கடந்த காலங்களில் நடைபெற்ற பல்வேறு வன்முறை நிகழ்வுகளில் இஸ்லாமியர்களுக்கு எவ்வித தொடர்பும் இல்லை என்பதை காலம் கடந்த நிலையில்தான் அறிய முடிந்தது.
அதாவது இஸ்லாமியர்களின் பெயரால் இஸ்லாமிய விரோத சக்திகள் இந்திய எல்லைக்குள் வன்முறையை தூண்டி விடுகின்றனர் என்பதை காலம் உணர்த்தியிருக்கிறது. இந்நிலையில், அயோத்தி வழக்கில் இஸ்லாமியருக்கு எதிராகத்தான் தீர்ப்பு வரும் என்பதைப்போலவும், அதனால் இஸ்லாமியர்கள் பெரும் வன்முறையை கட்டவிழ்த்து விடுவார்கள் என்பதை போலவும் ஒரு தோற்றத்தை உருவாக்கி வருகின்றனர்.
எனவே வழக்கின் தீர்ப்பு எதுவாக இருந்தாலும் இந்தியாவிலும், குறிப்பாக தமிழகத்திலும் பொது அமைதியை கட்டிக்காப்பதற்கு வேறு எவரைக்காட்டிலும் இஸ்லாமியர்கள் கூடுதல் கவனத்துடன் கடமையாற்ற வேண்டும் என்பது இன்றியமையாததாகும்.
தமிழகத்தை பொறுத்தவரையில் பல்வேறு இஸ்லாமிய அமைப்புகள்ஒன்றுகூடி, தீர்ப்பு எதுவாக இருந்தாலும் அமைதியை கடைப்பிடிக்க வேண்டும் என்று அறைகூவல் விடுத்திருப்பது பாராட்டுக்குரியதாகும். அத்துடன், தமிழக அரசும் பொது அமைதியை நிலைநாட்டுவதற்கு மேற்கொண்டு வருகிற முயற்சிகளும் வரவேற்கத்தக்கதேயாகும்.
இந்துக்களும், இஸ்லாமியர்களும் வெவ்வேறு பண்பாட்டு நடைமுறைகளை கொண்டிருந்தாலும், தாங்கள் இந்த மண்ணின் மைந்தர்களே என்பதை மறவாமல் எத்தகைய தூண்டுதலுக்கும் இலக்காகாமல் சகோதர உணர்வுகளுடன் ஒற்றுமையை பேணி பாதுகாக்க வேண்டுமெனவும் விடுதலைச்சிறுத்தைகள் சகோதர வாஞ்சையுடன் கேட்டுக்கொள்கிறது.

இவ்வாறு திருமாவளவன் கூறியுள்ளார்.



Source: Daily Thanthi

No comments:

Post a Comment