Islamic Widget

January 23, 2011

காஸ் ஆட்டோ தீ பிடித்து எரிந்தது பயணிகள் ஓட்டம்

புவனகிரி : பயணிகளை ஏற்றிச் சென்ற காஸ் ஆட்டோ திடீரென தீப்பிடித்து எரிந்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. கடலூர் மாவட்டம், சிதம்பரம் அடுத்த புவனகிரி சி.ஆலம்பாடியைச் சேர்ந்தவர் பழனிசாமி. ஆட்டோ டிரைவர். இரண்டு கிலோ சிறிய காஸ் சிலிண்டரில் இயங்கி வந்த இவரது ஆட்டோவில் நேற்று இரவு புவனகிரி பஸ் நிலையத்தில் இருந்து பூதவராயன்பேட்டைக்கு பயணிகளை ஏற்றிச் சென்றார். பயணிகளை விட்டு விட்டு சுத்துக்குழியில் இருந்து மீண்டும் புவனகிரிக்கு பயணிகளுடன் வந்து கொண்டிருந்தார். பெருமாத்தூர் அருகே வந்த போது திடீரென ஆட்டோவின் பின்னால் தீ பிடித்தது.
 உடன் ஆட்டோவை நிறுத்தி பார்ப்பதற்குள் தீ மளமளவென ஆட்டோ முழுவதும் பரவியது. இதனால் ஆட்டோவில் இருந்த பயணிகள் அலறியடித்து ஓடினர். சிலிண்டர் வெடித்து விடுமோ என்ற அச்சத்தில் சாலையில் சென்றவர்கள் நாலாப்புறமும் சிதறி ஓடினர். மற்ற வாகனங்கள் அப்படியே நிறுத்தப்பட்டன. ஆனால், சிலிண்டர் வெடிக்காமல் ஆட்டோ முழுவதும் எரிந்து சாம்பலானது. தகவல் அறிந்த சிதம்பரம் தீயணைப்புத் துறையினர் விரைந்து சென்று தீயை அணைத்தனர். இதனால் புவனகிரி- விருத்தாசலம் சாலையில் 30 நிமிடம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Source: Dinamalar

No comments:

Post a Comment