Islamic Widget

September 30, 2010

அயோத்தி வழக்குத் தீர்ப்பு: மேன் முறையீடு செய்ய மூன்று மாத கால அவகாசம்

அனைத்து இந்தியமக்களாலும் மிகவும் பரபரப்பாக எதிர்பார்க்கப்பட்ட அயோத்தியில் சர்ச்சைக்குரிய நிலம் யாருக்குச் சொந்தம் என்ற வழக்கில் அலகாபாத் ஐகோர்ட்டின் லக்னோ கிளை கோர்ட்டு வழங்கிய தீர்ப்பு தற்போது வெளியாகியுள்ளது.








டெல்லியிலிருந்து சுமார் 550 கி.மீ. தொலைவில், உத்தரப்பிரதேச மாநிலத்தில் உள்ளது அயோத்தி நகர். அயோத்தியில் சர்ச்சைக்குரிய ராமஜென்ம பூமி பகுதியில் அமைந்துள்ள சுமார் இரண்டரை ஏக்கர் நிலம் யாருக்கு சொந்தம் என்பதில் இந்து மற்றும் முஸ்லிம் அமைப்புகளுக்கு இடையே சிக்கல் நீடித்து வருகிறது. அயோத்தி விவகாரம் தொடர்பாக அனைத்து வழக்குகளும் இணைக்கப்பட்டு அவற்றை விசாரிக்க அலகாபாத் உயர் நீதிமன்ற சிறப்பு பெஞ்ச் அமைக்கப்பட்டது. 60 ஆண்டுகளாக நீடித்து வரும் வழக்கில் அலகாபாத் ஐகோர்ட்டின் லக்னோ பெஞ்ச் தனது விசாரணையை நிறைவு செய்து 24.09.2010 அன்று தீர்ப்பு என்று அறிவித்தது.

அலகாபாத் ஐகோர்ட்டின் லக்னோ பெஞ்ச் தீர்ப்பு வழங்குவதை ஒத்திவைக்க வேண்டும் என்றும், கோர்ட்டுக்கு வெளியே சமாதானமாக செல்ல முயற்சி மேற்கொள்ள வேண்டும் என்றும் திரிபாதி என்ற ஓய்வுபெற்ற அரசு அதிகாரி வழக்கு தொடர்ந்தார். திரிபாதியின் வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம், தீர்ப்பை ஒத்திவைக்கக் கோரிய மனுவை விசாரிப்பதற்காக தீர்ப்பு வெளியிட ஒரு வாரம் தடை விதித்தது. இந்தத் தடை உத்தரவை 28.09.2010 அன்று விலக்கிக் கொண்டதோடு ஒத்திவைக்கக் கோரிய மனுவை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

இதையடுத்து அயோத்தி வழக்கில் 30.09.2010 அன்று பிற்பகல் 3.30 மணி அளவில் தீர்ப்பு வழங்கப்படும் என, அலகாபாத் ஐகோர்ட்டின் சிறப்பு அதிகாரி ஹரிசங்கர் துபே கூறினார். 30.09.2010 அன்று பிற்பகல் 3.30 மணி அளவில், நீதிபதிகள் எஸ்.யு.கான், சுதிர் அகர்வால், டி.வி.சர்மா ஆகியோர் அடங்கிய சிறப்பு பெஞ்ச் தீர்ப்பை அறிவித்தது. தீர்ப்பில் அயோத்தி நிலம் மூன்று தரப்பினருக்கு சொந்தம் என்றும், இந்த தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்ய 3 மாதகால அவகாசம் உள்ளது என்றும் அலகாபாத் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. மேலும் சர்ச்சைக்குரிய நிலம் 2.5 ஏக்கரை மூன்றாக பிரிக்கப்படும் வரை தற்போதைய நிலை தொடரும் என்றும் கூறப்பட்டுள்ளது. மூன்றில் ஒரு பங்கு நிலம் பாபர் மசூதி கமிட்டியிடம் ஒப்படைக்கப்பட வேண்டும். மற்றொரு பகுதி நிர்மோகி அகாரா அமைப்புக்கு தர வேண்டும்.


எஞ்சிய இன்னொரு பகுதி புதிதாக அமைக்கப்படும் அறக்கட்டளைக்கு தரப்பட வேண்டும். நிலத்திற்கு உரிமை கோரிய சன்னி வக்பு வாரியம், நிர்மோகி அகாரா மனுக்கள் நிராகரிக்கப்பட்டன என்று தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது. உத்தரபிரதேச கோர்ட்டுகளில் கடந்த 60 ஆண்டுகளாக நடந்து வந்த இந்த வழக்கின் தீர்ப்பு யாருக்கு சாதகமாக கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பு இன்றுடன் முடிவுக்கு வந்துள்ளது.
வன்முறைகள் நிகழா வண்ணம் நாடெங்கிலும் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. தீர்ப்புக்குப் பின்னரான நிலவரங்கள் உடனுக்குடன் தொடர்ந்து வெளியாகும்.. தமிழ்.சி.என்.என் செய்தி வலையமைப்போடு தொடர்ச்சியாக இணைந்திருங்கள்...

No comments:

Post a Comment