Islamic Widget

February 16, 2011

பரங்கிப்பேட்டையில் வண்ண மீன் உற்பத்தி மூலம் வருமானத்தை அதிகரிக்கலாம்: விஞ்ஞானி சுந்தரேசன் பேச்சு

பரங்கிப்பேட்டை : "கடல் வண்ண மீன் உற்பத்தியை பெருக்கி நாட்டின் வருமானத்தை அதிகரிக்கலாம்' என மத்திய அரசு விஞ்ஞானி சுந்தரேசன் பேசினார். தேசிய மீன் வளர்ப்பு அபிவிருத்தி வாரிய நிதி உதவியுடன் கடல் வண்ண மீன் வளர்ப்பு மற்றும் உற்பத்தி குறித்த பயிற்சி பரங்கிப்பேட்டை அண்ணாமலைப் பல்கலைக்கழக கடல்வாழ் உயிரின ஆராய்ச்சி மையத்தில் நடந்தது. மீன்வளத்துறை சிறப்புச் செயலர் கண்ணகி பாக்கியநாதன் துவக்கி வைத்தார்.
 கடல் வண்ண மீன்களை பராமரித்தல், உணவு முறைகள் மற்றும் மீன் குஞ்சுகளை உற்பத்தி செய்வது போன்ற கருத்துகள் பயிற்றுவித்தல் மூலமும், செய்முறை மூலமும் விளக்கப்பட்டது.தமிழ்நாடு, கேரளா, ஆந்திரா, பீகார், அந்த மான், புதுச்சேரி, ஒடிசா, லட்சத்தீவு, டில்லி, உத்திரபிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் இருந்து ஆராய்ச்சியாளர்கள், சுயஉதவிக்குழுவினர்கள் பயிற்சி பெற்றனர். நிறைவு விழாவிற்கு துணைவேந்தர் ராமநாதன் தலைமை தாங்கினார். புல முதல்வர் பாலசுப்ரமணியன் வரவேற்றார்.திட்ட ஒருங்கிணைப்பாளர் அஜீத்குமார் முன்னிலை வகித்தார். மக்கள் தொடர்பு அதிகாரி செல்வம், ஓய்வுப்பெற்ற கடல்வாழ் உயிரின ஆராய்ச்சி மைய இயக்குனர் அய்யாக்கண்னு, இணை அமைப்புச் செயலர் ஆறுமுகம் பங்கேற்றனர். சிறப்பு விருந்தினர் மத்திய அரசின் விஞ்ஞான தகவல் மைய விஞ்ஞானி சுந்தரேசன் பேசுகையில், "உலக அளவில் கடல் வண்ண மீன்கள் தேவை அதிகமாக உள்ளது.இந்தியாவில் மிகக்குறைந்த அளவே ஏற்றுமதி செய்யப்படுகிறது. இம்மையம் நடத்தும் பயிற்சி மூலம் கடல் வண்ண மீன் உற்பத்தியை பெருக்கி நாட்டின் வருமானத்தை அதிகரிக்கலாம்' என்றார். மீன்வள பயிற்சி மற்றும் தொழில் நுட்ப மைய முதன்மை அதிகாரி செல்வராஜன் பேசுகையில், "இம்மையத்துடன் மீன் வள பயிற்சி மற்றும் தொழில் நுட்ப மையம் ஒப்பந்தம் மேற்கொண்டு தமிழக கடலோர மாவட்டங்களில் இதனை செயல்படுத்தப்படும்' என்றார்.

No comments:

Post a Comment