Islamic Widget

May 04, 2011

அமெரிக்கா ஒசாமாவை கண்டுபிடித்தது எப்படி? புதிய தகவல்!

கடந்த 2001ஆம் ஆண்டு, செப்டம்பர் 11ம் தேதி நடந்த, அமெரிக்க இரட்டை கோபுர தாக்குதலுக்குப் பின், பத்து ஆண்டுகளாக அமெரிக்கா இராணுவம் ஒசாமா பின் லேடனை தேடி வந்தது. ஆனால் பிடிக்க முடியவில்லை. இந்நிலையில் 10 ஆண்டுகளுக்குப் பிறகு அமெரிக்கா, ஒசாமா பின் லேடனை கண்டுபிடித்தது எப்படி என்ற தகவல் இப்போது வெளியாகியுள்ளது.
கடந்த 2010ம் வருடம் ஜூலை மாதம், பெஷாவர் அருகே சி.ஐ.ஏ.வுக்காக வேலை பார்த்த அதிகாரிகள், பாகிஸ்தானி ஒருவரின் வெள்ளை நிற காரைப் பின்தொடர்ந்து சென்று கார் பதுவு எண்ணை தெரிந்து கொண்டனர். அந்த காரை சி.ஐ.ஏ. அதிகாரிகள் பல மாதங்களாக தொடர்ந்து கண்காணித்துவந்தனர். பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தில் இருந்து 52 கி.மீ. தூரத்தில் உள்ள அபோதாபாத் எனும் நகரத்தில், குப்பைகள் நிறைந்த நீளமான ரோட்டையொட்டி, பெரிய பாதுகாப்பு காம்பவுண்டுடன் கூடிய கட்டிடத்தை அடையாளம் கண்டனர்.அந்த வீட்டையும் தொடர்ந்து கண்காணித்தனர். அங்கு ஒசாமா தங்கி இருப்பது உறுதி செய்யப்பட்டது. அபோதாபாத்தில் உள்ள ஒசாமா தங்கியுள்ள வீட்டின் செயற்கைகோள் படங்களை வைத்து ஆராய்ந்தனர். எட்டு மாதங்களுக்கு பிறகு, கடந்த திங்கட்கிழமை நள்ளிரவில், நான்கு ஹெலிகாப்டர்களில் 79 அமெரிக்க கமோண்டே படையினர் அந்த வீட்டின் காம்பவுண்டை சுற்றி வளைத்தனர். துப்பாக்கி சூடு நடத்தப்பட்டது. ஒசாமா உள்ளிட்ட ஐந்து பேர் சுட்டுக்கொல்லப்பட்டனர். இந்த தாக்குதல் விஷயம் பற்றி பாகிஸ்தான் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்படவில்லை. இறந்த ஐந்து பேரில் ஒருவர், உயரமாகவும், பெரிய தாடியுடன் தலையில் குண்டு காயம்பட்டு, ரத்தம் படிந்த உடலுடன் கிடந்தார். அமெரிக்க கப்பல்படையை சேர்ந்த ஒரு வீரர் அவரை படம் பிடித்து, உறுதி செய்வதற்காக அதிகாரிகளுக்கு அனுப்பினார்.இந்த தாக்குதலை நடத்துவதற்கு முன், கடந்த ஓராண்டாக கிழக்கு ஐரோப்பாவில் உள்ள தனிசிறையில் அடைக்கப்பட்டிருந்த அல்-கொய்தா பயங்கரவாதிகளிடம், உளவுத்துறையினர் பல்வேறு விதங்களில் விசாரணை செய்தனர். இந்த ஆப்பரேஷன் வெற்றியில் முடியுமா அல்லது ஆபத்தை உண்டாக்குமா என சி.ஐ.ஏ. அதிகாரிகள் பல கோணங்களில் ஆராய்ந்தனர்.தாக்குதலை நடத்துவது குறித்து வெள்ளை மாளிகை அதிகாரிகள் இடையே வெவ்வெறு விதமான கருத்துகள் நிலவின. இன்னும் சிறிது காலம் காத்திருந்து உண்மையிலே ஒசாமா அங்குதான் இருக்கிறாரா என்பதை உறுதி செய்துகொள்ளலாம் அல்லது குண்டு போட்டு தாக்குதல் நடத்தலாம் என இருவேறு கருத்துகள் நிலவின.குண்டு போடும் திட்டத்தை ஒபாமா ஏற்கவில்லை. இதனால் விளைவுகள் கடுமையாக இருக்கும் என ஒபாமா கருதினார். இறுதியாக நேரடி தாக்குதல் நடத்த முடிவு செய்யப்பட்டது. இரண்டு ஹெலிகாப்டர் முன்னாடி செல்ல, பாதுகாப்புக்கு பின்தொடர்ந்து இரண்டு ஹெலிகாப்டர்கள் செல்ல வேண்டும் என முடிவு செய்யப்பட்டது.அமெரிக்க நேரப்படி ஞாயிற்றுக்கிழமை பிற்பகலில் வெள்ளை மாளிகையில் உள்ள அறையில் அதிபர் ஒபாமா, அவரது ஆலோசகர், ஹிலாரி கிளின்டன், பாதுகாப்பு தலைமை அதிகாரிகள் ஆகியோர், தாக்குதல் நிலவரத்தை திரையில் உன்னிப்பாக கவனித்து கொண்டிருந்தனர். ஒபாமா இறுகிய முகத்துடன் உட்கார்ந்திருந்தார். பெரும்பாலான நேரம் அறை அமைதியாகவே இருந்தது. ஒவ்வொரு நிமிடமும், நாட்கள் போல நகர்ந்தன என வெள்ளை மாளிகை தலைவர் ஜான் பிரன்னன் தெரிவித்தார். சி.ஐ.ஏ. தலைமையகத்தில் இருந்து அதன் இயக்குநர் பெனாட்டா, பாகிஸ்தானில் என்ன நடந்து கொண்டிருக்கிறது என்பதை வீடியோ ஸ்கீரின் மூலம் அதிபருக்கு தெரிவித்துக்கொண்டிருந்தார். இறுதியாக, "அவனை கொன்று விட்டோம்' என அதிபர் ஒபாமா கூறியதும் அறையில் இருந்தவர்கள், ஆரவாரம் செய்தனர். உலகில் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட "ஆபரேஷன்' முடிவுக்கு வந்தது.உலகிலேயே அதிக பொருட்செலவில் நடந்த ஒசாமா தேடல் வேட்டை முடிவுக்கு வந்தது. அமெரிக்காவின் முதல் எதிரியான ஒசாமாவின் உடல் ஹெலிகாப்டரில் எடுத்துச் செல்லப்பட்டு கடலில் வீசப்பட்டது. 10 ஆண்டுகள் அமெரிக்க உளவுத்துறையின் திட்டங்கள் தோல்வியில் முடிந்தாலும் இறுதியாக வெற்றி கிடைத்தது.

No comments:

Post a Comment