Islamic Widget

October 22, 2011

இந்திய தூதருக்குச் சவூதியில் வரவேற்பு!

கடந்த 20-10-11 வியாழன் அன்று சவூதி அரேபியாவிற்கு இந்தியத்தூதராக புதிதாக பதவியேற்ற மேதகு ஹமீத் அலி ராவ் அவர்களுக்கு சவூதி அரேபியாவில் வாழும் இந்தியர்களின் சார்பாக சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.
அந்த நிகழ்ச்சியில், தூதுரக அதிகாரிகளும், 600க்கும் அதிகமான இந்தியர்களும் குடும்பத்துடன் வந்து கலந்து கொண்டனர். இந்த நிகழ்ச்சியில் ரியாத் தமிழ்ச் சங்கத்தின் செயலாளர் திரு. இம்தியாஸ் அவர்கள் பேசும் பொழுது மூன்று கோரிக்கைகளை முன்வைத்தார்.


முதலாவதாக, சவூதி அரேபியாவில் 21 லட்சம் இந்தியர்கள் வேலைசெய்கிறார்கள். அவர்களில் பெரும்பாலானோர் குறைந்த சம்பளத்தில் வேலைபார்ப்பவர்கள். அவர்கள் ஏஜென்சிகளால் ஏமாற்றப்படுகிறார்கள். பின்னர் அடிப்படை வசதிகள் கூட இல்லாத இடங்களில் தங்க வைக்கப்படுகிறார்கள். பெரும்பாலான நேரங்களில் அவர்களின் நிறுவனத்தினரினாலேயே ஏமாற்றப்படுகிறார்கள். அவர்களுக்குத் தூதரகம் உரிய உதவிகள் செய்யவேண்டும். பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவிடும் நோக்கில் இந்தியத் தூதரகத்தில் சமுதாய நலப்பிரிவில் அதிகம் நபர்களை அமர்த்தவேண்டும்.

இரண்டாவதாக, சவூதி அரேபியாவில் இந்திய தூதுரகத்தின் சார்பில் நடக்கும் பள்ளிகளின் வருட வாடகை சுமார் 20 - 25 மில்லியன் வருகிறது. ஒவ்வொரு முறை ஒப்பந்தம் முடியும் பொழுதும் கட்டிட உரிமையாளர்கள் உயர்த்தும் வாடகையால் பள்ளிகளின் நிர்வாகம் மிகுந்த சிரமத்திற்குள்ளாகின்றது. எனவே தூதுவர் அவர்கள் பள்ளி நிர்வாகத்துடன் இணைந்து சமுதாயத்தில் உள்ள சமுதாய ஆர்வலர்களையும் சேர்த்து ஒரு குழு அமைத்து அரசாங்க கடனுதவியுடன் முதல் கட்டமாக மூன்று முக்கிய பிராந்தியங்களிலும் நமக்குச் சொந்தமான பள்ளிக் கட்டிடத்தைக் கட்டுவதற்கு தூதுவர் ஆவன செய்ய வேண்டும்.

மூன்றாவதாக, சவூதி அரேபியாவில் வாழும் இந்தியர்கள் சந்திக்கும் பிரச்னைகளுள் ஒன்று அவர்களின் பிள்ளைகளின் மேல்படிப்பு. பல குடும்பங்கள் பிள்ளைகளின் படிப்பு காரணமாக ஆண்கள் இங்கு வேலைசெய்வதும், குடும்பம் இந்தியாவில் தனித்து இருப்பதுமாக அவதியுற நேர்கிறது. இதனை மனதில் கொண்டு தூதர் அவர்கள் பொறியியல் மற்றும் மருத்துவ படிப்புகளுக்கு இந்தியக் கல்வி நிறுவனங்களின் கூட்டு முயற்சியுடன் சவூதி அரேபியாவில் மேல்படிப்பு படிப்பதற்குண்டான கல்லூரிகள் தொடங்க ஆவன செய்ய வேண்டும்.
மேற்கண்ட மூன்று கோரிக்கைகளை முன் வைத்து, தூதரின் சேவைக்கு இந்தியர்கள் அனைவரும் தங்களால் இயன்ற அனைத்து ஒத்துழைப்பையும் நல்குவதாக வாக்களித்தார்.

மேலும் பலரும் பல்வேறு விதமான கோரிக்கைகளுடன் தூதுவரை வாழ்த்தினார்கள், இதற்கு ஏற்புரை வழங்கிய இந்தியத்தூதர் மேதகு. ஹமீத் அலி ராவ் அனைவரின் கோரிக்கைகளையும் உரிய முறையில் பரிசீலிப்பதாக வாக்குறுதியளித்தார்.

மேலும், சவூதி அரேபியாவில் வாழும் இந்தியர்கள் தங்களைத் தூதரகத்தில் பதிவு செய்து கொள்ளும்படியும் அதற்காக தூதரகம் http://www.indianembassy.org.sa என்ற இணையதளத்தில் வசதிகள் செய்துள்ளதாகவும் அறிவித்தார்.

மேலும் அவர் கூறும்பொழுது, "இந்திய - சவூதி இருவழி வர்த்தகம் கடந்த வருடம் 25 பில்லியன் அமெரிக்க டாலர்களைத் தொட்டது. கடந்த 15 வருடங்களாக இந்தியாவின் எண்ணெய் தேவையை 20 சதவீதம் சவூதி அரேபியா பூர்த்தி செய்கிறது" என்று தெரிவித்தார். சவூதி அரேபியாவிற்கு இந்தியாவின் ஏற்றுமதி 4 பில்லியன் டாலராகவும், இந்தியா, சவூதி அரேபியாவின் நான்காவது பெரிய வர்த்தக கூட்டாளியாக இருப்பதாகவும் தெரிவித்த அவர், சவூதியில் இந்தியர்களின் முதலீடு 2 பில்லியனாக உள்ளது என்றும் தெரிவித்தார்.

"இந்தியர்களின் கண்ணியமும், கடின உழைப்பும், சட்டத்தை மதிக்கும் தன்மையும் இந்தியர்கள் அனைவருக்கும் பெரும் மதிப்பை பெற்றுத்தந்துள்ளது" என்றும் அவர் கூறினார்.

நிகழ்ச்சியின் இறுதியில் தூதர் அவர்கள் அங்கு கூடியிருந்த அனைத்து இந்தியர்களையும் தனித்தனியாக சந்தித்து அவர்களுடன் கைகுலுக்கிக் கொண்டது இந்தியர்களின் மனதில் மக்களுக்காக அமர்த்தப்பட்ட தூதுவர் என்ற நம்பிக்கை விதையை விதைத்தது.
சவூதிவாழ் இந்தியர்களின் சார்பாகவும் குறிப்பாக தமிழர்கள் சார்பாகவும் தூதர் அவர்களை வரவேற்று, அவருக்கு அனைத்து வகைகளிலும் ஒத்துழைப்பை வழங்குவோம் என்று வாழ்த்துரைக்கிறோம்.

1 comment:

  1. எங்கே இருந்து மேட்டரை எடுத்திர்களோ, அவர்களுக்கு நன்றியும் சொல்லுங்கள். அது தான் பண்பாடு எனவே...

    ReplyDelete