Islamic Widget

October 17, 2011

உள்ளாட்சி தேர்தல்: முதல்கட்ட வாக்குப்பதிவு தொடங்கியது

 
தமிழக உள்ளாட்சித் தேர்தலுக்கான முதல்கட்ட வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு பலத்த பாதுகாப்புடன் தொடங்கியது. உயர் நீதிமன்ற உத்தரவுப்படி, பதற்றமான வாக்குச்சாவடிகளில் வாக்குப்பதிவு வீடியோ படம் பிடிக்கப்பட்டு வருகிறது.தமிழகத்தில் முதல்கட்டமாக சென்னை உள்பட 10 மாநகராட்சிகள், 60 நகராட்சிகள், 259 பேரூராட்சிகள், 191 ஊராட்சி ஒன்றியங்களுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது.
மாலை 5 மணி வரை நடைபெறும் வாக்குப்பதிவில், ஒரு கோடியே 37 லட்சத்து 97 ஆயிரத்து 898 பேர் வாக்களிக்க தகுதி பெற்றவர்களாவர்.
மாநிலம் முழுவதும் 43 ஆயிரம் வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டு உள்ளன. சென்னை மாநகராட்சிக்கு உள்பட்ட பகுதியில், 1,399 இடங்களில் 4,934 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டு இருக்கின்றன. சென்னை மாநகராட்சி தேர்தலில் மொத்தம் 44.5 லட்சம் வாக்காளர்கள் வாக்களிக்க தகுதி பெற்றவர்களாவர்.
தமிழகம் முழுவதும் தேர்தல் பணியில் 7 லட்சம் பணியாளர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
தேர்தல் பாதுகாப்பு பணியில் 80 ஆயிரம் போலீசார் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். வெளிமாநில போலீசாரும் வரவழைக்கப்பட்டுள்ளனர்.
சென்னை மாநகராட்சி பகுதியில் வாக்குப்பதிவு நடைபெறும் அனைத்து வாக்குச்சாவடிகளிலும் ஓட்டுப்பதிவு வீடியோ படம் எடுக்கப்படுகிறது. இதேபோல் பிற பகுதிகளில் உள்ள பதற்றமான வாக்குச்சாவடிகளிலும் வாக்குப்பதிவு முழுவதும் வீடியோவில் பதிவு செய்யப்படுகின்றது.
வாக்குப் பதிவு முடிந்தவுடன் வாக்குப் பெட்டிகளும், மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களும் சீல் வைக்கப்பட்டு, வாக்கு எண்ணும் மையங்களுக்கு பாதுகாப்பாக கொண்டு செல்லப்படும். அங்கு தனியறையில் வாக்குப்பெட்டிகள் வைக்கப்பட்டு, அறைக்கதவு சீல் வைக்கப்படும்.
இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு நாளை மறுதினம் (புதன்கிழமை) 65 நகராட்சிகள், 270 பேரூராட்சிகள், 194 ஊராட்சி ஒன்றியங்கள், 12 ஆயிரத்து 524 கிராம பஞ்சாயத்துகளுக்கு வாக்குப்பதிவு நடைபெறுகிறது. அந்தப் பகுதிகளில் இன்று மாலை 5 மணியுடன் பிரசாரம் முடிவடைகிறது.
இந்தத் தேர்தலில் பதிவாகும் வாக்குகள் வரும் 21-ம் தேதி (வெள்ளிக்கிழமை) எண்ணப்படுகின்றன. அன்று காலை 7 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடங்கும். ஒவ்வொரு சுற்று முடிவிலும் வாக்கு எண்ணிக்கை விவரங்களை வெளிப்படையாக அறிவிப்பதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் மாநில தேர்தல் ஆணையம் செய்துள்ளது. அன்று மதியமே முடிவுகள் தெரிந்துவிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

No comments:

Post a Comment