Islamic Widget

October 21, 2011

பெண்ணை கட்டிப் போட்டு 11 பவுன் கொள்ளை

சிதம்பரத்தில் வியாழக்கிழமை பகலில் வீட்டில் தனியாக இருந்த பெண்ணைக் கட்டிப் போட்டு அவர் அணிந்திருந்த 11 பவுன் நகைகளை மர்ம நபர்கள் இருவர் கொள்ளையடித்து சென்றுள்ளனர்...


சிதம்பரம் முத்தையா நகரில் வசிப்பவர் ஆர்.சேதுராமன். தொலைதூரக்கல்வி மையத்தில் அலுவலக உதவியாளராக உள்ளார். இவரது மனைவி அம்சவேணி (32). வியாழக்கிழமை பகல் வீட்டில் தனியாக இருந்துள்ளார். அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் மின்சார கணக்கீடு எடுக்க வந்துள்ளதாகக் கூறியுள்ளனர். பின்னர் இருவரும் குடிக்க தண்ணீர் கேட்டுள்ளனர். தண்ணீர் தருவதற்காக அம்சவேணி உள்ளே சென்ற போது மர்ம நபர்கள் இருவரும் உள்ளே புகுந்து அவரது கைகளைக் கட்டி, வாயில் துணியை வைத்து அடைத்தனர்.

மேலும், அம்சவேணியின் கையில் கத்தியால் கீறிவிட்டு அவர் அணிந்திருந்த 11 பவுன் நகைகளைப் பறித்துக் கொண்டு வீட்டின் வெளிக்கதவை தாழ்போட்டு விட்டுச் சென்றுவிட்டனர். பின்னர் அம்சவேணி கட்டை அவிழ்த்து செல்போன் மூலம் தனது கணவருக்குத் தெரிவித்துள்ளார். இது குறித்துத் தகவல் அறிந்த சிதம்பரம் ஏஎஸ்பி எம்.துரை சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை மேற்கொண்டார். அண்ணாமலைநகர் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஆரோக்கியராஜ் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளார்.

அம்சவேணியின் அண்ணன் வேணுகோபால் முத்தையா நகர் அடங்கியுள்ள கொத்தங்குடி ஊராட்சி மன்றத் தலைவராக இருந்தவர். தற்போது நடைபெற்ற உள்ளாட்சி தேர்தலில் அவர் மீண்டும் தேர்தலில் போட்டியிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment