Islamic Widget

February 01, 2011

ஒரே பிரசவத்தில் 4 குழந்தைகள் - `கடவுள் கொடுத்தது' : தந்தை

சென்னையைச் சேர்ந்த ஒரு பெண்ணுக்கு, தனியார் மருத்துவமனையில் ஒரே பிரசவத்தில் 4 குழந்தைகள் பிறந்தன. இது கடவுள் கொடுத்தது என்று இக்குழந்தைகளின் தந்தை கூறியுள்ளார். சென்னை மேடவாக்கம் பகுதியைச் சேர்ந்த சாந்தி என்ற பெண் கடந்த ஆண்டு கர்ப்பம் அடைந்தார். 3-ஆவது மாதத்தில் பரிசோதனைக்காக சாந்தியின் கணவர் ஆனந்த் மருத்துவரிடம் அழைத்துச் சென்றார்.
அப்போது, ஸ்கேன் செய்து பார்த்தபோது, சாந்தியின் வயிற்றில் 3 கருக்கள் வளர்வதை மருத்துவர்கள் கண்டுபிடித்தனர்.இந்த நிலையில், ஜனவரி 27ஆம் தேதி சாந்திக்கு பிரசவ வலி ஏற்பட்டது. அதனைத் தொடர்ந்து, கீழ்ப்பாக்கம் ஆவடி ரோட்டில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் அவர் சேர்க்கப்பட்டார்.3 குழந்தைகள் வயிற்றில் இருப்பதால், அறுவை சிகிச்சை மூலம் குழந்தைகளை பத்திரமாக எடுக்க டாக்டர்கள் முடிவு செய்தனர். அதன்படி, 28ஆம் தேதி காலை அறுவை சிகிச்சை மூலம் குழந்தைகள் எடுக்கப்பட்டன.பரிசோதனையின்போது, 3 குழந்தைகளாக தெரிந்தது, பிரசவத்தின்போது 4 குழந்தைகளாக பிறந்ததை கண்டு டாக்டர்கள் ஆச்சரியம் அடைந்தனர். இதில், தலா 2 ஆண் குழந்தைகளும், 2 பெண் குழந்தைகளும் அடங்கும்.
தற்போது, தாயும், குழந்தைகளும் நன்றாக உள்ளனர். 4 குழந்தைகள் பிறந்தது குறித்து ஆனந்த் செய்தியாளர்களிடம் கூறும்போது, ``முதலில் பரிசோதனை செய்த டாக்டர்கள் 3 குழந்தைகள் இருப்பதாக கூறினர். பின்னர், பிரசவத்தின்போதுதான், 4 குழந்தைகள் பிறந்துள்ளதாக தெரிவித்தனர். ஸ்கேன் பரிசோதனை செய்யும்போது ஒரு குழந்தை மறைந்த நிலையிலேயே இருந்துள்ளது. அதனால்தான், 3 குழந்தைகள் இருப்பதாக டாக்டர்கள் கூறியுள்ளனர். எத்தனை குழந்தை என்றாலும், எல்லாம் கடவுள் கொடுத்தது'' என்று மகிழ்ச்சியுடன் கூறினார்.


Source:inneram

No comments:

Post a Comment